ஜோகூர் பாரு, ஜன 25- விளையாடிக் கொண்டிருந்த போது கால்வாயில் தவறி விழுந்த ஐந்து வயதுச் சிறுவன் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.
இத்துயரச் சம்பவம் இங்குள்ள லோரோங் செம்பக்கா பத்து 18 ½, கம்போங் சுங்கை திராமில் நேற்றிரவு நிகழ்ந்தது.
அச்சிறுவனின் உடல் சம்பவ இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் செம்பனை மரம் அருகே மீட்புக் குழுவிரால் இரவு 10.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மூத்த உதவித் தலைவர் முகமட் ஃபைஸ் ரம்லி கூறினார்.
குடியியிருப்புப் பகுதியில் சாலையோரம் உள்ள கால்வாய் அருகில் விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவன் திடிரென தவறி நீரில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
செம்பனை மரத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட போது அச்சிறுவன் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் இன்று அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, இரவு 7.07 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தைத் தொடர்ந்து 14 உறுப்பினர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.