கோலாலம்பூர், பிப் 12- நான்கு சக்கர இயக்க வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு மேலும் நால்வர் காயங்களுக்குள்ளாகினர்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.28 மணியளவில் ஜாலான் பத்தாங் காலியில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து கோல குபு பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட எழுவர் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்தாக அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை அடைந்த போது டோயோட்டா ஹைலக்ஸ் ரக நான்கு சக்கர இயக்க வாகனம் ஒன்று பள்ளத்தில் விழுந்துள்ளதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். காரில் சிக்கிக் கொண்டிருந்த ஒருவரை மீட்கும் பணியில் அவர்கள் துரிதமாக ஈடுபட்டனர். இந்த மீட்பு பணி சுமார் 10 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
இந்த விபத்தில் 58 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறிய அவர், காயங்களுக்குள்ளான மேலும் நால்வர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார். இவ்விபத்தில் சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம் இன்னும் பெறப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.