ஆலம், பிப் 12- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்திற்கு (பி.கே.பி எஸ்.) சொந்தமான எட்டு ஹெக்டர் பகுதியில் பயிரிடப்பட்ட தானிய சோளத்தின் இரண்டாம் கட்ட அறுவடை இந்த மாத தொடக்கத்தில் இருந்து கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறக்குமதி சோளத்துடன் ஒப்பிடுகையில் இந்த சோளத்தின் விலை குறைவாக உள்ளதால் சிறிய அளவில் கால்நடை வளர்ப்போர் மற்றும் தொழில்துறையினரின் தேவையைப் இது பூர்த்தி செய்யும் என்று பி.கே.பி.எஸ். குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.
முதல் அறுவடை கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கியது. அதன் பின்னர் கடந்த புதன்கிழமையும் வரும் மார்ச் மாதம் 3 மற்றும் 23. ஆம் தேதிகளிலும் அறுவடைப் பணி மேற்கொள்ளப்படும். விநியோகப் பணிகள் எளிதாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம் என அவர் சொன்னார். தேவை மற்றும் பயிரீட்டு பொருளின் பொருத்தத்திற்கு ஏற்ப இவ்வாண்டில் பயிரீட்டை விரிவுபடுத்த விரும்புகிறோம்.
வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்திட்டத்திற்காக 121 ஹெக்டேர் நிலம் முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள கோலா லங்காட் செலாத்தானில் கடந்த ஆண்டு 16.9 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பயிரீட்டு வாயிலாக 118 டன் உயர்தர தானிய சோளத்தை ஜனவரி 21ஆம் பி.கே.பி.எஸ். அறுவடை செய்தது .
சிலாங்கூர் அரசாங்கத்தின் தொடக்கத் திட்டமான இது, இறக்குமதி செய்யப்படும் கோழித் தீவனத்தைச் சார்ந்திருப்பதை குறைத்து அதன் மூலம் மாநிலத்தில் கோழியின் விலையைக் குறைப்பது அல்லது நிலைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.