கோலாலம்பூர், பிப் 17 – நாட்டில் ஒரே வகை பச்சரிசி திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கவில்லையென விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்திருக்கிறார்.
எந்தவொரு அறிவிப்பும் அல்லது முடிவும் 1994ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாடு சட்டத்தின் படி இருக்க வேண்டும் என்பதோடு அது குறித்து அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
வாழ்க்கைச் செலவினம் மீதான தேசிய நடவடிக்கை மன்றத்தின் அமலாக்க கண்காணிப்புக் குழுவின் அடுத்தக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு கூட்டாக விவாதிக்கப்படும் என்று பிரதமர் நேற்று வெளியிட்ட அறிக்கையை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொள்கிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மலேசிய மடாணி ஒரே வகை பச்சரிசி குறித்து புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைச் செலவினம் மீதான தேசிய நடவடிக்கை மன்றத்தின் உணவுப் பிரிவு பணிக்குழுத் தலைவருமான டத்தோ சைட் அபு ஹூசேன் ஹபிஷ் சைட் அப்துல் ஃபைசால் தெரிவித்திருந்த ஆலோசனை தொடர்பாக எழுந்துள்ள குழப்பம் குறித்து விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தெளிவுபடுத்த விரும்புவதாக முகமது சாபு விவரித்தார்.
உள்ளூர் பச்சரிசி (எஸ்.எஸ்.டி) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசி (எஸ்.எஸ்.ஐ.) இரு வகை அரிசி இனி இருக்காது என்றும் மலேசிய மடாணி பச்சரிசி என்ற ஒரே வகை அரிசி மட்டும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.