சைபர்ஜெயா, பிப் 17 – ஷா ஆலம், செக்சன் 7, புக்கிட் ராஜா தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட 18 பேர் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட 10 பேர் ஷா ஆலம் மருத்துவமனையிலும், ஐந்து பேர் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையிலும், 3 பேர் சுங்கை பூலோ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார்.
அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது. வெளிநோயாளிகளாக சிகிச்சையளிக்கப்படும் அளவுக்கு அவர்களில் 14 பேர் லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மேலும் நான்கு பேர் கண்காணிப்புக்காக வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று உலக புற்றுநோய் தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு நேற்று காலை 11.15 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் எரிவாயு சேமிப்பு கலத்தின் வால்வில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதைக் தாங்கள் கண்டறிந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (நடவடிக்கை) அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்