கோல சிலாங்கூர், மார்ச் 2- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டில் இங்குள்ள சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் இன்று நடைபெற்ற எஹ்சான் ஃபன் ரன் எனும் ஓட்டப்பந்தய நிகழ்வில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த மையத்தின் மேம்பாடுகளையும் புதிய தயாரிப்புகளையும் பிரபலப்படுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். இத்தகைய நிகழ்வுக்கு முதன் முறையாக ஏற்பாடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் ஃபுரூட் வேலி கடந்தாண்டு முதன் முறையாக மாநில அரசுக்கு 800,000 வெள்ளியை லாபமாக ஈட்டித் தந்தது. இந்த தொகை குறைவானதாக இருக்கலாம். ஆனால், இந்த மையம் குறிப்பாக பள்ளி விடுமுறை காலங்களில் வருகையாளர்களின் ஈர்ப்பு மையமாக விளங்கி வருவதால் இது சிறப்பான தொடக்கமாக கருதப் படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
காய்கறிகள் மற்றும் பழ மரங்களை நடுவது உள்ளிட்ட பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது. இது தவிர 400 ஏக்கரில் டுரியான் பயிரீட்டு திட்டமும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இண்டர்நெட் ஆஃப் திங்கிங் வாயிலாக புத்தாக்கத்தை பயன்படுத்தி கஃபே டாப்போர் எஹ்சான் திறக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த மையத்தின் லாபத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அங்கு டிராம் வண்டி சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற புதுப்பிப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள விருக்கிறோம் என்று சிலாங்கூர் ஃபன் ரன் நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
சிலாங்கூர் ஃபுரூட் வேலிக்கு மேலும் அதிகமான சுற்றுப்பயணிகளை ஈரக்கும் நோக்கில் பி.கே.பி.எஸ். புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள காஃபே டாருள் ஏஹ்சான் உணவகத்தையும் அமிருடின் திறந்து வைத்தார்.