ECONOMYMEDIA STATEMENT

தீயை அணைக்கும் போது மின்சாரம் தாக்கியது- பெண் தீயணைப்பாளர் காயம்

கோத்தா கினபாலு, மார்ச் 21- தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தீயணைப்பாளர் ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கானார். மெங்காத்தால், கம்போங் கெலியாங்காவ் 2இல் நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் லிந்தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த சமந்தா ஏஷா சிகா (வயது 36) என்ற என்ற அந்த தீயணைப்பாளர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
குயின் எலிசபெத் 11 மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அந்த தீயணைப்பாளரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக லிந்தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த அகுஸ்தாவியா ஜோ குவாஸி கூறினார்.
தீச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 10.05 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சம்பவ இடத்திற்கு தீயணைப்புக் குழு விரைந்தாக அவர் தெரிவித்தார்.
இந்த தீச்சம்பவத்தில் ஒரு வீடு மற்றும் ஒரு தனியார் பட்டறை பாதிக்கப்பட்டதோடு நான்கு சக்கர இயக்க  மூன்று வாகனங்களும் முற்றாக அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு வாகனங்களில் இருந்த நீரைக் கொண்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், கடும் போராட்டத்திற்குப் பின்னர் காலை மணி 10.44 அளவில் தீ கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது என்றார்.

Pengarang :