ECONOMYMEDIA STATEMENT

ஓட்டுநர் கருகி மரணம்-கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து

ஈப்போ, மார்ச் 24- கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில் அதன் ஓட்டுநர்  கருகி மாண்டார். இத்துயரச் சம்பவம் தெலுக் இந்தான், ஜாலான் கம்போங் ஆயர் ஹீத்தாம், 13வது மைலில் நேற்றிரவு நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் இரவு மணி 9.33 அளவில் தங்களுக்கு புகார் கிடைத்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபோரோட்ஸி நோர் அகமது கூறினார்.

தெலுக் இந்தான் தீயணைப்பு நிலையம் மற்றும் தெலுக் இந்தான் 12வது மைல் தன்னார்வலர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது பெரெடுவா மைவி ரகக் கார் ஒன்று  சாலையோரத்தில் தீப்பற்றி எரிவதை தீயணைப்பாளர்கள் கண்டனர். அக்காரினுள் 80 விழுக்காட்டு தீயக்காயங்களுடன் ஆடவர் ஒருவர் இருப்பது தெரியவந்தது என்றார் அவர்.

அக்காரில் ஏற்பட்டத் தீயை ரெஸியோ முறையைப் பயன்படுத்தி அணைத்த தீயணைப்பு வீரர்கள், பின்னர் அவ்வாடவரை காரிலிருந்து மீட்டனர். எனினும், அந்த ஆடவர் உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்து சுகாதார அமைச்சின் தரப்பினர் உறுதிப்படுத்தினர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி  இரவு மணி 11.27 அளவில் முற்றுப் பெற்றதாகக் கூறிய அவர், இறந்த நபரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.


Pengarang :