ஜோகூர் பாரு, ஏப் 11- கோத்தா திங்கி அருகே உள்ள தஞ்சோங் பாலாவ் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார்.
25 வயதுடைய இளைஞர் காணாமல் போனது தொடர்பில் நேற்று காலை 10.15 மணியளவில் தனது துறைக்கு தகவல் கிடைத்ததாக கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூசேன் ஜமோரா கூறினார்.
கோத்தா திங்கியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் முதல் அந்த கடற்கரையில் முகாமிட்டு இரவைக் கழித்ததாக அவர் சொன்னார்.
நேற்று காலை கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது அந்த இளைஞர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில்
காலை 11.10 மணியளவில் அவரின் உடல் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக அவ்வாடவரின் உடல் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட நபரின் உடல் அவர் காணாமல் போனதாக கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கை கமாண்டர் மூத்த தீயணைப்பு அதிகாரி பைசல் அகமது அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.