கோலாலம்பூர், ஜூலை 6- கோவிட்-19 நோய் பீடிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் உத்தரவு இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி ரத்து செய்யப்படுவதோடு அந்நோய் தொடர்பான சுயப்பரிசோதனை முடிவுகளை மைசெஜாத்ரா செயலியில் பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் அகற்றப்படுகிறது.
கோவிட்-19 நோயாளிகள் அனைவரும் இனி வழக்கமான சுவாசப் பிரச்சனைகளைக் கொண்ட நோயாளிகளைப் போல் கருதப்படுவார்கள் என சுகாகார அமைச்சு கூறியது.
இந்நோய் பீடிக்கும் பட்சத்தில் முகக்கவசம் அணிவது, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது போன்ற நடைமுறைகளைக் கடைபிடிக்க அவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் அது தெரிவித்தது.
இருப்பினும், கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்கள் மூலம் அந்நோய் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி அமைச்சு கேட்டுக் கொண்டது.
நோய்ப் பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருந்தால் அல்லது நிலைமை மோசமடைந்தால் மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சைப் பெறும்படி பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சம்பந்தப்பட் நோயாளியை பரிசோதிக்கும் மருத்துவர் மருத்துவ விடுப்பு வழங்குவது அல்லது மருத்துவமனையில் தொடர் சிகிச்சைப் பெறுவது குறித்து முடிவெடுப்பார் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
மலேசியாவில் இதுவரை புதிய திரிபுகள் கண்டறியப்பட்டவில்லை எனக் கூறிய அமைச்சு, தற்போதைக்கு ஓமிக்ரோன் திரிபு பரவல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.