மாச்சாங், ஜூலை 6- விரைவு பேருந்து மற்றும் கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் வயோதிக தம்பதியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து மாச்சாங்-தானா மேரா சாலையின் 3.7வது கிலோ மீட்டரில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் பெரேடுவா கஞ்சில் காரின் ஓட்டுநரான அப்துல் ரசாப் அவாங் கெச்சிக் (வயது 88) மற்றும் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவரின் மனைவி ஜைத்தோன் இஸ்மாயில் (வயது 70) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ஷஃபிக்கி ஹூசேன் கூறினார்.
அத்தம்பதியர் தானா மேராவிலிருந்து மாச்சாங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை அடைந்த போது அப்துல் ரசாப் செலுத்தியக் கார் கட்டுப்பாட்டை ,இழந்து எதிர்தடத்தில் நுழைந்து எதிரே 29 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த விரைவு பேருந்துடன் மோதியது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை எனக் கூறிய அவர், உயிரிழந்த இருவரின் உடல்களும் பரிசோதனைக்காக மாச்சாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன என்றார்.