ECONOMYMEDIA STATEMENT

இலவச கவசத் தொப்பியைப் பெற அதிகாலை 6.00 மணி முதல் வரிசையில் காத்திருந்த மக்கள்

குவாந்தான், ஜூலை 6- இங்குள்ள டத்தாரான் சாயாங்கியில் இன்று நடைபெற்ற மத்திய மண்டலத்திற்கான மடாணி ராக்யாட் 2024 நிகழ்வில் வழங்கப்பட்ட இலவச கவசத் தொப்பியைப் பெறுவதற்காக சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜே.பி.ஜே.) கண்காட்சிக் கூடம் முன் அதிகாலை 6.00 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர்.

இரண்டாவது நாளாக நடைபெற்ற பழைய கவசத் தொப்பிகளை மாற்றிக் கொள்ளும் இந்த நிகழ்வுக்கு பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததாக பினாங்கு மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் கமாருள் இஸ்கந்தார் நோர்டின் கூறினார்.

தங்கள் வசமிருந்து 750 கவசத் தொப்பிகளும் ஒரு மணிக்கு குறைவான நேரத்தில் விநியோகிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இந்த மடாணி நிகழ்வில் அமைக்கப்பட்டுள்ள ஜே.பி.ஜே. கண்காட்சிக் கூடம் காலை 9.00 மணிக்குத் திறக்கப்பட்டது. காலை 10.15 மணிக்கெல்லாம் அனைத்து கவசத்  தொப்பிகளும் விநியோகிக்கப்பட்டு விட்டன. நேற்று இரண்டு மணி நேரத்தில் 1,500 கவசத்  தொப்பிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.

சிரிம் எனப்படும் மலேசிய தர நிர்ணய மற்றும் தொழிலியல் ஆய்வுக் கழகத்தின் தர அங்கீகாரம் பெற்ற கவசத் தொப்பிகளை மோட்டார் சைக்கிளோட்டிகளும் அதில் பயணம் செய்வோரும் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இலவச கவசத் தொப்பி விநியோக நிகழ்வு நடத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த கவசத் தொப்பிகளை வழங்குவதற்கு நாங்கள் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை. நாட்டின் பிரஜைகள் என்பதை நிரூபிக்க அடையாளக் கார்டைக் காட்டினால் போதும். பழைய கவசத்  தொப்பிகளைக் கொடுத்து புதியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.


Pengarang :