ஷா ஆலம், ஜூலை 3:
ஸ்மார்ட் சிலாங்கூர் தோட்டத் திட்டம் நகர மக்களிடையே விவசாயத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் ஒரு முயற்சி ஆகும் என்று சிலாங்கூர் மாநில உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் வேளாண்மை அடிப்படை தொழில் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கூறினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப் படும் என்றார். பொது மக்கள் விவசாய அடிப்படை தொழிலை நவீன தொழில்நுட்பத்தில் வணிக ரீதியாக ஈடுபட இது வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.
” ஸ்மார்ட் சிலாங்கூர் தோட்டத் திட்டம் தாவரங்கள் நவீன தொழில்நுட்ப முறையில் ‘பெஃர்திகாஸி’ அடிப்படையில் மேம்படுத்தப்படும். இத்திட்டத்தில் ஒரு ஏக்கரில் 1000 போலிபேக் தாவரங்களை நடலாம். இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தை அடையாளம் கண்டு விட்டோம்,” என்று தெரிவித்தார்.
மேலும் விவரிக்கையில், ஒரு ஏக்கர் நிலத்தில் ரிம 50,000 கொண்டு இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம் என்றார். மாநில அரசாங்கம் தற்காலிக நிலப்பயன்பாடு உரிமம் (திஓஎல்) கொடுக்க தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்வம் உள்ள தொழில் முனைவர்கள் பணப்பயிர்களை அரசாங்க நிலத்தில் பயிரிட்டு லாபம் ஈட்ட முடியும் என்று விவரித்தார்.
” இத்திட்டம் அறிமுகப்படுத்தி பொது மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிமுறையை மாநில அரசாங்கம் எடுக்க முனைந்து உள்ளது. நகர மக்கள், இடப் பற்றாக்குறையினால் விவசாய அடிப்படை தொழில் தொடங்க முடியாமல் தவிக்கின்றனர்,” என்று ஜைடி அப்துல் தாலிப் கூறினார்.
இதற்கு முன்பு, ஊராட்சி மன்றங்கள் பொது மக்களை வீடமைப்பு பகுதியில் சிறிய அளவில் கூட்டாக பயிரிட்டு வர ஊக்குவிப்பு கொடுத்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#கேஜிஎஸ்