டெங்கில், ஆகஸ்ட் 4:
தனியார் நில உரிமையாளர்கள் அல்லது அரசாங்க நிலத்தில் அத்துமீறி குப்பைகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசாங்கம் தயங்காது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். அஸ்மின் அலி, பொறுப்பற்ற சில தரப்பினர் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இடங்களில் சட்ட விரோதமாக குப்பைகளை வீசும் நடவடிக்கைகள் கண்டு வருத்தம் கொள்வதாக கூறினார். சில தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கையினால் நிலங்கள் மோசமான சூழ்நிலையில் உள்ளது எனவும் மேலும் பொது மக்களுக்கு இடையூறுகளும் ஏற்படுத்தி உள்ளது என்றார்.
” சில தனியார் நில உரிமையாளர்கள் சட்ட விரோதமாக குப்பைகளை வீசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 7ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டன. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது. எதிர் வரும் ஆகஸ்ட் 7-க்குள் நிலங்களை மறுசீரமைப்பு செய்து விட வேண்டும். ஆனாலும் நில உரிமையாளர்கள் நில அலுவலகத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தவே இல்லை. எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுத்து அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்யப்படும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.
அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக குப்பைகளை வீசும் இடங்களில் வேர்ல்டுவைட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தலையீட்டு சுத்தம் செய்யுமாறு தாம் பணித்திருப்பதாக கூறினார்.
பொறுப்பற்ற முறையில் குப்பைகளை வீசுவதினால் சிலாங்கூர் மாநில தண்ணீர் வளத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார். கிராமத்து தலைவர்கள், குப்பைகளை சட்ட விரோதமாக வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அஸ்மின் அலி கூறினார்.
#கேஜிஎஸ்