செப்பாங், நவம்பர் 18:
தேசிய வகை புயூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக புத்தகப்பை வழங்கப்பட்டது. இதனைச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு.சிவக்குமார் அவர்களும், தென் சிப்பாங் இந்திய சமூகத் தலைவர் டத்தோ ஆ.சிவக்குமார் அவர்களும் , பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. மலர்ச்செல்வன் அவர்களும், சேவையாளர்கள் திரு.முரளி, திரு.சுப்பையா, பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர், சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநிலம் முழுதும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினார். அதோடு நல்ல நெறிகளைக் கற்கும் இடம் ஆரம்பப்பள்ளி தான் என்றும் குறிப்பிட்டார். தான் தமிழ்ப்பள்ளியில் பயின்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். தமிழ்ப்பள்ளியில் கற்றதனாலேயே தான் இன்று நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய தென் சிப்பாங் இந்திய சமூகத் தலைவர் டத்தோ ஆ.சிவக்குமார், தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பாடங்களிலும் கட்டொழுங்கிலும் சிறந்து விளங்க காரணமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றிதனைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அவர் தமதுரையில் மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதோடு நாடு முழுமையிலும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய தலைமையாசிரியர் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு நன்றிதனைத் தெரிவித்துக் கொண்டார்.
வீரத் தமிழன்