NATIONAL

பிஎன் ஆட்சி செய்யும் பொழுது ஒரு துளி நீரைக் கூட இலவசமாக தந்ததில்லை !!!

ஷா ஆலாம், மார்ச் 6:

அம்னோ தேசிய முன்னணி வெறும் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதில் வல்லமை கொண்டவர்கள் என்றும் சிலாங்கூர் மாநில மக்களின் சமூக நலன்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சைட் பட்லி ஷா சைட் ஓஸ்மான் கூறினார். 2008-க்கு முன்பு, 50 ஆண்டுகள் சிலாங்கூரை ஆட்சி செய்யும் போது மக்களுக்கு எந்த ஒரு வகையிலும் நல்ல திட்டங்களை செயல்படுத்த தவறிவிட்டது என்றார்.

”  நிலாவையும் மற்றும்  நட்சத்திரங்களையும் தருவதாக கூறி வருவது வெறும் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே. சிலாங்கூர் மாநில மக்களின் வாக்குகளை பெற நடத்தப்படும் இறுதி முயற்சி இதுவாகும். சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் டத்தோ ஸ்ரீ ஜமால் முகமட் யூனூஸ் வாக்காளர்களை கவர இலவச வீடுகள் மற்றும் இலவச  வாகன உரிமங்களை தருவதாக கூறி வருவது அம்னோவினர் வாக்குகளை பெறுவதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளதைக் காட்டுகிறது. அம்னோ தேசிய முன்னணி சிலாங்கூர் மாநிலத்தை ஆளும் போது ஒரு துளி நீரைக் கூட இலவசமாக வழங்கியதில்லை என்று சொன்னால் அது மிகையாகாது,” என்று தமது அறிக்கையில் சைட் பட்லி ஷா குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் அரசாங்கம் சிலாங்கூர் மாநில மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வழி சேவையாற்றி வருகிறது என்று தெரிவித்தார். ஆகவே, அம்னோ தேசிய முன்னணி தலைவர்கள் சிலாங்கூரை நிர்வாகம் செய்வதில் தோல்வி அடைந்தது என்ற நிதர்சனமான உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

#தமிழ் பிரியன்


Pengarang :