ஷா ஆலம், மார்ச் 11-
கோத்தா கெமுனிங் வட்டச் சாலையை தரம் உயர்த்தும் பணி மார்ச் மாத இறுதியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்தப் பணி கடந்த ஆண்டே நிறைவடைந்திருக்க வேண்டும். ஆயினும், குத்தகையாளரின் தவறினால் இது கால தாமதமடைந்தது என்றார் அவர்.
“சம்பந்தப்பட்ட குத்தகையாளர் மீது எம்பிஎஸ்ஏ நடவடிக்கை எடுக்கும். இம்மாத இறுதியில் இந்தப் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அமிருடின் டூவிட்டரில் அனுப்பிய தகவலில் தெரிவித்தார்.
இதனிடையே, ஜாலான் பெர்சியாரான் அங்கெரிக் வென்னிலா மற்றும் பெர்சியாரான் அங்கெரிக் மோகாரா வட்ட சாலைகளின் தரத்தையும் உயர்த்தும் பணியில் எம்பிஎஸ்ஏ தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அதன் பொறியியல் பிரிவு இயக்குநர் செரெமி தர்மன் கூறினார்.