ஷா ஆலம், ஏப்.22-
சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் உட்பட சுமார் 210 பேர் பிஜே நகர்ப்புற கேளிக்கை மோட்டார் குறுக்கோட்ட பந்தயத்தில் பங்கேற்றனர். பிரபலங்கள் பங்கெடுத்த இந்நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் நீச்சல் குளத்திற்கு அருகே உள்ள SS7 /15 பகுதியில் கடந்த ஏப்ரல் 20, 21 ஆம் தேதிகளில் நடைபெற்றன.
மலேசியாவில் இத்தகையதொரு மோட்டார் சைக்கிள் பந்தயத்தை நடத்திய மாநகராட்சி மன்றமாக இம்மன்றம் திகழ்வதாக அதன் செயலகப் பிரிவு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
“முதன் முறையாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் மூலம் நகரப்பகுதியில் விளையாட்டு சுற்றுலாத் தளத்தைக் கொண்ட மாநகரமாக பெட்டாலிங் ஜெயா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவ்வறிக்கை கூறியது.
அதே வேளையில், நகர மக்களின் பொழுது போக்குகளில் ஒன்றாக இந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தை ஏற்பாடு செய்வதோடு அதை மாநில அளவிலும் அனைத்துலக அளவிலும் ஏற்பாடு செய்யவும் எம்பிபிஜே எண்ணம் கொண்டுள்ளது என்றும் அது தெரிவித்தது.