ஷா ஆலம், மே 6-
அனைத்துலக இணையத் தளமான ஃபோர்டியுன் டாட் காம் வெளியிட்டுள்ள 2019ஆம் ஆண்டு 50 செல்வாக்குமிக்க உலகத் தலைவர்கள் பட்டியிலில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் 47ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.
தமது 93ஆவது வயதில் அரசியல் களத்திற்குத் திரும்பியதோடு நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்திய தலைவர் என்ற காரணத்தினால் துன் மகாதீர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக என்று அந்த இணையத்தள் ஏடு தெரிவித்தது.
1981 தொடங்கி 2003 வரையில் நாட்டின் நான்காவது பிரதமராக மகாதீர் 22 ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்த போது, தென் கிழக்காசியாவின் புலி என மலேசியா போற்றப்பட்டது என்று அது கூறியது.
மீண்டும் நாட்டின் ஏழாவது பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் நாடு எதிர்நோக்கியுள்ள ஊழல் விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதோடு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கையும் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
மகாதீரும் அவரது அரசாங்கமும் நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளதாக என்று அது தெரிவித்தது.