ஷா ஆலம், அக்.11-
பொது சேவை துறை ஏற்பாடு செய்த நிர்வாக மதிப்பீடு மாநாட்டில் சிறந்த பொது சேவை நிர்வாகத்திற்கான அங்கீகாரத்தை சிலாங்கூர் அரசாங்க நிர்வாக செயலகமும் (எஸ்யுகே) பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகமும்( எம்பிபிஜே) தட்டிச் சென்றன.
இந்த அங்கீகாரமானது பொது சேவை துறை பணியாளர்கள் நேர்மையுடன் உண்மையாகவும் பணிபுரிவதற்கான ஓர் ஆதாரமாக அமைந்துள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மாநில அரசாங்கம் எப்போதும் சிறந்த நிர்வாக முறைக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. இவற்றின் சேவை தரம் தகவல் சுதந்திர சட்டம், குறிப்பட்ட கால வரம்பிற்குள் பணிகளை நிறைவேற்றும் மதிப்பீட்டு கொள்கை போன்றவற்றை பின்பற்றுகிறது. அதேவேளையில், இவற்றின் சேவை தரமானது செல்காட் எனப்படும் அமைப்பின் தரத்திற்கு ஈடாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அங்கீகாரமானது இதர அரசாங்க அமைப்புக்களும் தங்கள் சேவை தரத்தை உயர்த்துவதற்கு ஓர் உத்வேகமாகவும் அமையும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.