ஷா ஆலம், அக்.23-
வரும் நவம்பர் ம்தல் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2020 சிலாங்கூர் வரவு செலவு திட்டத்தில் எந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று தேர்வு செய்ய தனது டூவிட்டரை பின் தொடருவோருக்கு வாய்ப்பளிக்கப்படுவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
தனது டூவிட்டரில் கல்வி, வீடமைப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் எந்த துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இணைய பயனர்கள் தேர்வு செய்வதற்கான வாய்ப்பை அமிருடின் தனது டூவிட்டரில் ஏற்படுத்தியுள்ளார்.
“தாக்கல் செய்யப்படவிருக்கும் சிலாங்கூர் 2020 வரவு செலவு திட்டம் குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன? எந்தத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?”
‘உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். தேர்வு செய்த பின்னர் மறு டூவிட் செய்யுங்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை காலை 9 மணி வரையில், 54 விழுக்காட்டினர் வீடமைப்பு துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கருத்துரைத்துள்ளனர், அதற்கு அடுத்த் நிலையில் கல்வி இடம்பெற்றுள்ளது. 25 மற்றும் 10 விழுக்காடு வாக்குகளுடன் பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்களும் முறையே 3ஆம் 4ஆம் இடங்களில் உள்ளன.