உலு சிலாங்கூர், ஏப் 25- நேற்று இங்கு நடைபெற்ற கோல குபு பாரு தொகுதி இடைத்தேர்தலுக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வில் லுமுட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 10 அரச மலேசிய கடற்டடை வீரர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஏறக்குறைய ஆயிரம் பேர் தங்களின் சமய நம்பிக்கைகளின்படி மெளன அஞ்சலி செலுத்துவதைக் காண முடிந்தது.
சனிக்கிழமை நடைபெறவிருந்த அரச மலேசிய கடற்படையின் திறந்த தினத்தை முன்னிட்டு மூன்றாவது ஒத்திகையை நடத்தும் போது கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.