கிள்ளான், டிச.11-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் ஊழலுக்கு எதிரான சிறந்த மாநிலம் என்று அங்கீகரிக்கப்பட்டதானது நேர்மையான நிர்வாக முறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநில அரசாங்கத்தின் முயற்சிகள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன என்பதைக் காட்டுகிறது.
மாநில அரசாங்க செயலாளர் அலுவலகம் இந்த அங்கீகாரத்தை கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பெற்றதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“அதேவேளையில், பொது சேவை துறையிடம் இருந்து சிறந்த பொது சேவை மதிப்பீட்டு நிர்வாகத்துக்கான அங்கீகாரமும் சிலாங்கூருக்கு கிடைத்துள்ளது” என்று அவர் சொன்னார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் 74ஆவது பிறந்த தினத்தையொட்டி இஸ்தானா ஷா ஆலமில் ஆற்றிய விசுவாச உறுதிமொழி உரையின் போது மேற்கண்ட தகவல்களை மந்திரி பெசார் வெளியிட்டார்.
மாநில பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வித்துறையில் சிறந்த விளங்குவதற்கான திட்டம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அமைதி நிறைந்த சிலாங்கூரை உருவாக்குதல் , பசுமையான சுற்றுச் சூழலுக்கு உத்தரவாதம் மற்றும் சமூக திறனாற்றலில் சிறந்த விளங்குவது ஆகிய ஐந்து கொள்கையின் அடிப்படையில் சிலாங்கூர் அதன் 2020 வரவு செலவு திட்டத்தை வரைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.