கோலாலம்பூர், டிச.12-
நாடு முழுவதிலும் உள்ள வசதிகள் குறைந்த பள்ளிகளைச் சீரமைக்கும் 534 திட்டங்களில் 90 விழுக்காடு பூர்த்தியடைந்துவிட்டதாக மலேசிய கல்வி அமைச்சு அறிவித்தது.
இதுவரையில் மொத்த 452 திட்டங்கள் நிறைவுபெற்றுள்ள வேளையில், ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை உயரும் என்று கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக் கூறினார்.
“இந்த எண்ணிக்கையை பூஜ்யமாக்குவது அமைச்சின் இலக்காகும். இதன் வழி அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் தரமான கல்வியைப் பெறுவதோடு நில்லாமல் அனைத்து வசதிகளையும் கொண்ட சூழ்நிலையில் கல்வி பயணத்தைத் தொடர வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பாகும்” என்றார் அவர்.
உடனடியாகத் தீர்வு காண வேண்டிய பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கிவிட்டு பின்னர் இதர பள்ளிகளும் படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இத்தகைய பள்ளிகளில் பெரும்பாலானவை சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள போதிலும் தீபகற்பத்தில் உள்ள பள்ளிகள் மீதும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.