ஷா ஆலாம், ஜன. 28:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் (எஸ்பிஆர்எம்) வெளியிடப்பட்ட குரல் பதிவு தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு போலீஸ் கடந்த வாரம் புக்கிட் அமானில் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் ரஹீமிடமிருந்து வாக்குமூலம் பெற்றது.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோரை வாக்குமூலம் அளிக்க தாங்கள் விரைவில் அழைக்கவிருப்பதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை சட்டப் பிரிவு (டி5) துணை தலைமை இயக்குநர் மியோர் ஃபாரிடாலாதாஷ்ராஷ் வாஹிட் கூறினார்.
“ கடந்த வாரம் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரை நாங்கள் அழைத்தோம். மற்ற சாட்சியாளர்கள் விரைவில் அழைக்கப்படுவர்” என்றார் முதிர்நிலை துணை ஆணையருமான மியோர் ஃபாரிடாலாதாஷ்ராஷ்
இவ்விவகாரம் குறித்து எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் லத்திஃபா கோயா ஜனவரி 15 ஆம் தேதி போலீசாரிடம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். இந்த ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி மற்றும் ஐந்து அதிகாரிகளும் வாக்குமூலம் அளித்தனர்.