கோலாலம்பூர், மார்ச் 23-
வீட்டில் இருங்கள் என்ற ஆலோசனையை மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, மாறாக, கோவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில் நடமாட்ட இடைவெளியான ஓர் அடி தூரம் விலகியிருப்பதை குறிப்பாக பொது சந்தை மற்றும் பேரங்காடிகளில் பின்பற்றுவது அவசியமாகும்.
கோவிட்-19 பரவல் நீடிக்காதிருக்க அரசாங்கம் பிறப்பித்துள்ள நடமாட்ட கட்டுப்பாடு ஆணை முடிவுற இன்னும் 8 தினங்கள் எஞ்சியுள்ள வேளையில் மலேசியர்கள் கட்டொழுங்குடன் ஆணையைப் பின்பற்றுவது அவசியமாகும்.
மலேசியர்களில் 90 விழுக்காட்டினர் ஆணையைப் பின்பற்றுவதாக அரச மலேசிய போலீஸ் துறை அறிவித்திருந்தாலும், நடைமுறைகளைப் பின்பற்றாதோர் 10 விழுக்காடுதான் என்றாலும் 3 கோடி 10 லட்சம் மக்கள் தொகையில் இது பெரிய எண் என்பதை உணரவேண்டும்.
எனவே, எஞ்சிய மலேசியர்களும் கட்டொழுங்குடன் செயல்பட 7,500 ராணுவப் படையினர் பணிக்கமர்த்தப்பட்டுள்ளது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடமாட்ட கட்டுப்பாட்டை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய போலீஸ், ராணுவம் ஆகியவற்றோடு ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது.