ஷா ஆலம், மார்ச் 30-
நாட்டில் கோவிட்-19 பரவல் கடுமையாக இருக்கும் சிவப்பு வட்டாரப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 15 வட்டாரங்களில், மொத்தம் 223 சம்பவங்களைப் பதிவு செய்து பெட்டாலிங் ஜெயா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து லெம்பா பந்தாய் (219), உலு லங்காட் (209), சிரம்பான் (108), ஜோகூர் பாரு (105), குளுவாங் (97), கோத்தா பாரு (76), கெப்போங் (68), கிந்தா (75), கிள்ளான் (62), கோம்பாக் (59), தாவாவ் (75) மற்றும் ஹிலிர் பேராக் (53) ஆகிய வட்டாரங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்த சிவப்பு வட்டாரப் பகுதிகளில் வசிப்போர், நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். அத்தியாவசியப் பொருட்களை வாங்க குடும்பத் தலைவர் அல்லது பிரதிநிதி ஒருவர் மட்டும் செல்வது, சுத்தத்தைப் பேணுவது, எப்போதும் வீட்டிலேயே இருப்பது போன்ற நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சு நினைவுறுத்தியது.
40 சம்பவங்களுக்கும் அதிகமாகப் பதிவு செய்த வட்டாரங்கள் சிவப்பு வட்டாரம் என்றும் 20 முதல் 40 சம்பவங்களைப் பதிவு செய்துள்ள வட்டாரங்கள் ஆரஞ்சு வட்டாரம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒன்றில் இருந்து 20 சம்பவங்கள் வரை பதிவு செய்துள்ள வட்டாரங்கள் வெள்ளை வட்டாரம் என்றும் சம்பவங்கள் எதனையும் பதிவு செய்யாத வட்டாரங்கள் பச்சை வட்டாரம் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.