ஷா ஆலம், ஜூலை 13:
எதிர் வரும் நவம்பர் மாதத்திற்குள் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஏழைகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாராகி விடும் என்று மாநில சமூக பொருளாதார மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். விவேக பரிவுமிக்க மக்கள் நலன் திட்டத்தின் (எஸ்எஸ்ஐபிஆர்) வழி ஏழைகளின் குடும்ப வருமானம் போன்ற விவரங்களை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
” இதே வேளையில், இத்திட்டத்தின் கீழ் 33 பரிவுமிக்க மக்கள் நலன் திட்டங்களை (ஐபிஆர்) மாநில மக்கள் அறிந்துக் கொள்ள முடியும். ஏழை எளிய மக்கள் தங்களை பதிந்து கொள்ள முடியும்,” என்று பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜாமாலியா ஜாமாலுடின் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது இவ்வாறு கணபதி ராவ் பேசினார்.
சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் திட்டத்தின் கீழ் 4,506 ஏழை எளிய மக்களுக்கு உதவியதாகவும் மற்றும் 609,632 வறுமையானவர்களுக்கு பெருநாள் காலத்து பற்றுச்சீட்டுகள் வழங்கப் பட்டது என்றும் அவர் கூறினார்.