|
புது டெல்லி, ஜன 16- உலகின் மிகப் பெரிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார்.
காணொளி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், குறுகிய காலத்தில் தடுப்பூசியை கண்டு பிடித்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். வழக்கமாக தடுப்பூசியை கண்டு பிடிக்க பல ஆண்டுகள் பிடிக்கும். இவ்வளவு குறுகிய காலத்தில் ( இந்திய தயாரிப்புத் திட்டத்தின் கீழ்) ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசிகளை நாம் தயாரித்து விட்டோமே என்றார் அவர். இந்த தடுப்பூசியின் பயன்பாட்டு வியூகத்தை வெளியிட்ட அவர், முதலில் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் அடுத்து முக்கிய துறைகளில் பணியாற்றுவோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார். தடுப்பூசி செலுத்துவதில் தாதியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் காரணத்தால் பிரதமர் மோடி கூட இந்த தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ளவில்லை. அஸ்ட்ரா ஸினேகா/ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் மேம்படுத்தப்பட்டு செரும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி-யையும் இந்திய உயிரியல் தொழில் நுட்ப நிறுவனமான பாரத் பயோடெக் தயாரிப்பில் உருவான கோவாக்சின் தடுப்பூசியையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தற்போது சுமார் மூவாயிரம் தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்படுட்டுள்ள வேளையில் இந்த எண்ணிக்கையை இம்மாத இறுதிக்குள் ஐயாயிரமாகவும் மார்ச் மாதத்திற்குள் 12,000 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்ட நாடாக இந்தியா விளங்குகிறது. ஒரு கோடியே ஐந்து லட்சம் பேர் இந்நோயினால் பாதிக்கப் பட்ட வேளையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.