ஷா ஆலம், பிப்ரவரி 4:
கூட்டரசு பிரதேச அமைச்சர், டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னன் தெங்கு மன்சோர் மற்ற இனங்கள் மற்றும் மதங்களை சார்ந்தவர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தெங்கு அட்னன் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சில வழிபாட்டு தலங்கள் உண்மையில்லாத மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றது என்ற கூற்றை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறினார்.
” இது ஒரு பொறுப்பற்ற அறிக்கையாகும். வழிபாட்டு தலங்கள் புனிதமான இடமாகும். வழிபாட்டு தலங்கள் இறைவனை வணங்கும் உன்னதமான இடம் மட்டுமில்லாமல் மக்கள் நலமாக வாழ ஆண்டவனின் அருள் கிடைக்கும் இடமாகும். ஆனாலும், அம்னோ தேசிய முன்னணி தலைவர்கள் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களை அவமதிக்கும் செயலை அரங்கேற்றி உள்ளனர். இதனால் தான் மலேசிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர்,” என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சாடினார். பூச்சோங் 14-வது மைலில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கு முன்பு, தெங்கு அட்னன் தேவாலயங்கள் அரசாங்கத்தை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றது என்று குற்றம் சாட்டியது மட்டுமில்லாமல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.