கோலாலம்பூர், ஆக.21-
இன, சமய விவகாரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கைகள் மற்றும் கருத்துகள் வெளியிடும் தரப்பினருக்கு இனி எச்சரிக்கை விடுக்கப்படாது. மாறாக, கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். அரசியல் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் இது பொருந்தும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தெரிவித்தார்.
“இன விவகாரத்தை எழுப்பும் எந்த தரப்பினரையும் காவலில் வைக்க நான் தயங்க மாட்டேன். சம்பந்தப்பட்டவர்களை நான் நிச்சயம் கைது செய்வேன்” என்றார் அவர்.
இன மற்றும் சமய விவகாரங்களில் சம்பந்தப்படுபவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் அதிகாரிகள் அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அப்துல் ஹமிட் பாடோர் குறிப்பிட்டார்.
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தைக் கொண்ட சில தரப்பினரின் பொறுப்பற்ற செயலால் பலர் ஏமாற்றப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.