உலு சிலாங்கூர், ஏப் 27- கோல குபு பாரு தொகுதியில் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடர ஒற்றுமை அரசின் வேட்பாளரான பாங் சோக் தாவ் உறுதி பூண்டுள்ளார்.
இந்த இடைத் தேர்தலில் தாம் தேர்ந்தெடுக்கப் பட்டால் இங்குள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனிலும் தாம் அக்கறை காட்டவுள்ளதாக 31 வயதான பாங் சொன்னார்.
நாங்கள் விவேகத்துடனும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் பிரசாரத்தில் ஈடுபடுவோம். எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் கோல குபு பாருவில் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்வேன் என்றார் அவர்.
அதே சமயம், இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனிலும் அக்கறை காட்டுவேன். விரைவில் வெளியிடப்படவிருக்கும் தேர்தல் வாக்குறுதியில் இதன் தொடர்பான விபரங்களை வழங்குவேன் என இன்று இங்கு நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்
கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சுயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவ், பெரிக்கத்தான் நேஷனல் சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட்டும், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடினும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின்னும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கோல குபு பாரு தொகுதிக்கான தேர்தல் அதிகாரி யுஹானாஸ் அவுரி கமாருடின் அறிவித்தார்.
இதனிடையே, தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் மற்றொரு சுயேச்சை வேட்பாளரான சிங் பூன் லாயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
.கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.