ஜோர்ஜ்டவுன், ஆக.29-
மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் வரவு செலவு திட்டத்தை அறிவிக்க, மக்கள் 2020 வரவு செலவு திட்டம் குறித்து பொது மக்கள் தொடர்ந்து கருத்துகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்று நிதியமைச்சு கேட்டுக் கொண்டது.
2020 வரவு செலவு திட்டம் குறித்து belanjawan2020.treasury.gov.my, என்ற அகப்பக்கதின் மூலம் கடந்த ஆகஸ்ட் 9 தொடங்கி மக்கள் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர் என்று துணை நிதியமைச்சர் டத்தோ வீரா அமிருடின் ஹம்சா கூறினார்,
இதுவரை பெறப்பட்ட கருத்துகள் அரசாங்கம் வழங்க வேண்டிய உதவித் திட்டங்கள் வரி விலக்கு என்ற எல்லையில் நிற்காமல் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவது குறித்தும் பலர் கருத்துரைத்துள்ளனர் என்றார் அவர்.
“வழக்கமாக, இது போன்ற கருத்து பதிவுகள் அரசாங்கத்திடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகள், நிதியுதவிகள் மற்றும் வரி விலக்கு சலுகைகள் குறித்தே அமைந்திருக்கும். ஆனால், இம்முறை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வ பரிந்துரைகளையும் பலர் தெரிவித்துள்ளனர்” என்றார்.