ஷா ஆலம், நவ.11-
பொருட்களின் தரத்தை உயர்த்தவும் அனைத்துலக சந்தைக்கு விரிவுபடுத்தவும் ‘மேட் இன் சிலாங்கூர்’ பொட்டலத் திட்டத்தை மாநில அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொட்டலங்களின் தரத்தையும் பொருட்களின் சான்றிதழையும் மேம்படுத்த தயாராக இருக்கும் தொழில்முனைவர்களுக்காக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக முதலீடு, தொழில்துறை மற்றும் வர்த்தகம், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பங்கேற்பவருக்கு பொருள் சான்றிதழ், வர்த்தக முத்திரை வடிவமைப்பு, வர்த்த முத்திரை பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட பொட்டல அச்சடிப்பு போன்ற சேவைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
அனைத்துலக சந்தைக்கான இலக்கு தவிர்த்து இணையம் வழி வர்த்தகம் புரியும் தொழில்முனைவர்களுக்கு சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் வர்த்தக (சிதெக்) மன்றத்தின் மூலம் சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க உதவி நல்கப்படும் என்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு தொழில்திறன் பயிற்சியும் வழங்கப்படும் என்றார் அவர்.