ஷா ஆலம், டிச.26-
ஆற்று தூய்மைக்கேடு சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிச் செய்ய இண்டா வாட்டர் கொன்சோர்ட்டியம் நிறுவனம் சம்பந்தப்பட்ட பகுதிகளை கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ஐடபள்யூகே நிறுவனம் மாநில அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
“நாம் ஐடபள்யூகே நிறுவனத்தையோ மற்ற எவரையும் குறைச் சொல்லவில்லை. தூய்மைக்கேடு நிகழ்ந்த சுங்கை செமினி அந்நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது” என்றார் அவர்.
இதில் இச்சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க, இந்நிறுவனம் அதன் அமலாக்கத்தை அதிகரிப்பதோடு நம்முடன் ஒத்துழைப்பது அவசியம் என்று அவர் நினைவுறுத்தினார்.
எம்பிஎஸ்ஏ நிர்வாகப் பகுதியில் உள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் முழு வசதி நிறைந்த குப்பை அகற்றும் லாரியை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்,
அமலாக்க நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் பொறுப்பற்ற தரப்பினர் தூய்மைக்கேட்டை விளைவிக்கும் கழிவுப் பொருட்களை வீசுவதை அந்நிறுவனம் குறைக்கலாம் என்றார் அவர்.