புத்ராஜெயா, ஏப்ரல் 6:
பொது மக்கள் 100 விழுக்காடு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பின்பற்றும் வரை அதன் அமலாக்கங்கள் தீவிரப்படுத் தப்படும் என்று உள் துறை அமைச்சின் இயக்குநர் அஸ்ரின் சானி அப்துல்லா தெரிவித்தார். இன்னமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொது மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பின்பற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இரவு 8.00 மணிக்கு மேல் அனைத்து வர்த்தக தளங்களும் செயல்படக்கூடாது என்று விளக்கமாகக் கூறிவிட்டோம். 10.00 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், வெளியிடப்பட்டன. இருந்தும் இரவு 11.00 மணிக்கு மேல் வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள் .
சாலை தடுப்புச் சோதனைகளில் போலீசாரிடம் ‘ரொட்டி வாங்க போகிறேன், சிகரெட் வாங்க போகிறேன் என்று காரணம் சொல்கின்றனர். இவை ஏற்புடைய பதிலாக இல்லை. மக்கள் உண்மையிலேயே அரசாங்க அறிவிப்பில் முழு விழிப்புணர்வு பெறவில்லையா? அல்லது போலீசிடம் பொய் காரணங்களை கூறுகின்றனரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இப்பொழுது நாம் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கோவிட்-19 கிருமியுடன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
பொது மக்கள் தொடர்ந்து பொறுப்பில்லாமல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறி வெளியே சென்று கொண்டிருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் தான் பாதிப்பு என்பதை அவர்கள் உணரவேண்டும். இரவு 10.00 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே நடமாடினால் கைது செய்யப்படுவர்.