ஷா ஆலம், ஏப்.21-
ஷா ஆலம் மருத்துவமனை வளாகத்தில் பணியில் ஈடுபட்டுள்ள முன் வரிசை பணியாளர்களுக்கு 80 பெட்டி சுவாசக் கவசங்களையும் 400 லிட்டர் கிருமிநாசின் திரவங்களையும் ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) வழங்கியதாக அதன் நிறுவனத் தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார்.
கோவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் பணியாளர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
வழங்கப்பட்ட உதவியின் மொத்த மதிப்பு ரிம.24,700 ஆகும். இந்த உதவியானது சம்பந்தப்பட்ட பணியாளர்களின் சுமையைக் குறைப்பதோடு ஓர் ஊக்குவிப்பாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை முழுமையாகப் பின் பற்றும்படி ஷா ஆலம் குடிமக்களை என்பிஎஸ்ஏ கேட்டுக் கொண்டது. அதே வேளையில், வெளிப்புற நடவடிக்கைகளை முற்றாகத் தவிர்க்கும்படி அது வலியுறுத்தியது.