புத்ராஜெயா, ஜூலை 25:
மலேசிய நாட்டில் இன்று மேலும் இரண்டு புதிய கொவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது. அதில், ஜோகூரில் புக்கிட் திராம் தொற்றில் இரண்டு சம்பவங்களும், கூச்சிங் கட்டுமான நிறுவன தொற்றில் ஒரு சம்பவமும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நாட்டில் இன்று 23 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து இந்நோய்க் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,884-ஆக பதிவு செய்யப்பட்டிருப்பதாக டாக்டர் நோர் ஹிஷாம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று பதிவு செய்யப்பட்ட 23 சம்பவங்களில், 17 உள்நாட்டில் பரவியதாகும். அதில் 10 மலேசியப் பிரஜையை உட்படுத்தியது என்றும் ஏழு மலேசியப் பிரஜை அல்லாதவரை உட்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.