ECONOMYNATIONALPBTSELANGOR

சாலைகளைத் தரம் உயர்த்த 17 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 30- சாலைகளைத் தரம் உயர்த்துவது மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பது ஆகிய திட்டங்களை மேற்கொள்வதற்கு  பொதுப்பணித் துறைக்கு 17 கோடி வெள்ளி வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அவற்றில் பாலங்கள் மற்றும் மேம்பால நடைபாதைகளை அமைப்பதற்கு 81 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ரந்தாவ் பாஞ்சாங் பாலம், சுங்கை குண்டாங் பாலம், கம்போங் சுங்கை புவா பாலம், சுங்கை செரிகாலா பாலம் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் என்றார் அவர்.

தற்போது நிர்மாணிப்பில் உள்ள சாலைகளை பூர்த்தி செய்வதற்காக  3 கோடியே 60 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இது தவிர சாலைகளைத் தரம் உயர்த்துவதற்காக மாநில அரசு 10 கோடியே 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றில் எட்டு கோடி வெள்ளி கட்டுமானப் பணிகளுக்கும் 2.34 கோடி வெள்ளி  சாலைகளைத் தரம் உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்படும என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :