ஷா ஆலம், நவ 19- சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக 25 பேர் வர்த்தக தளவாடப் பொருள்களை பெற்றனர்.
சிலாங்கூரில் உள்ள அனைத்து இனங்களை சேர்ந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதில் மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளதை இந்நடவடிக்கை புலப் படுத்துகிறது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இத்திட்டத்திற்கு மொத்தம் 175 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற வேளையில் அவற்றில் 25 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தலா 5,000 வெள்ளி முதல் 8,000 வெள்ளி மதிப்புள்ள தளவாடப் பொருள்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன என்றார் அவர்.
இந்த திட்டத்திற்கு வர்த்தகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக கூறிய அவர், அடுத்தாண்டு சித்தம் அமைப்பு 500,000 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் திட்டங்களை அமல்படுத்தும் என்றார்.
செக்சன் 20, பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஜூலியானா பிரான்சிஸ் ( வயது55) என்ற தனித்து வாழும் தாய்க்கு தளவாடப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கோஹிஜ்ரா தலைவர் சுக்ரி இஸ்மாயில், தாமான் பத்து தீபா சமூகத் தலைவர் முருகன் முனுசாமி, ரிம்பா ஜெயா சமூக தலைவர் சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.