ஷா ஆலம், டிச 13- அடுத்தாண்டில் 15,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். வேலையின்மை பிரச்சனையை களையும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக அவர் சொன்னார். சிலாங்கூர் கெர்ஜாயா, ஜோம் கெர்ஜா, சிலாங்கூர் பிரிலான்சர்ஸ் மற்றும் சிலாங்கூர் ஆட்டோமோட்டிவ் டி.வி.இ.டி. ஆகிய திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சிலாங்கூர் கெர்ஜாயா மற்றும் ஜோம் கெர்ஜாயா திட்டங்கள் மூலம் பத்தாயிரம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார் அவர். வாகன தொழில் நுட்பத் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு சிலாங்கூர் ஆட்டோமோட்டிவ் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் அடையாளம் காணப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். வேலை நீக்கம் செய்யப்பட்ட பட்டதாரிகள் உள்ளிட்ட தரப்பினர் வருமானம் ஈட்டுவதற்குரிய மாற்று வழிகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்