ஷா ஆலம், டிச 27– டிங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிஃப் ஷான் அப்துல்லா மற்றும் அவரது வாகன ஓட்டுநருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டிங்கில் சட்டமன்ற தொகுதி சேவை மையம் 14 நாட்களுக்கு மூடப்படுகிறது.
அடிஃப்பின் வாகன ஓட்டுநருக்கு காய்ச்சல் கண்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில் இருவருக்குமே கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இறைவன் அருளால் எங்கள் உடல் நிலை சீராக உள்ளது. சிகிச்சை மற்றும் தனிமைப் படுத்துதல் நடவடிக்கைக்காக நாங்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படவிருக்கிறோம் என்று அடிஃப் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் இதர அமலாக்க துறைகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. எங்களுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படுவதற்கு இந்நடவடிக்கை துணை புரியும் என்றார் அவர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொகுதி சேவை மையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதோடு மருத்துவ சோதனைக்குப் பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சேவை மைய பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.