ஷா ஆலம், டிச 27- கோல சிலாங்கூர், கம்போங் அசகானில் சமூக மண்டபம் அமைப்பத-ற்கான நிலத்தை அடையாளம் காணும் முயற்சியில் தாம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.
அப்பகுதியில் சைம் டார்பி பிளாண்டேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் அல்லது வகாப் நிலம் தவிர்த்து அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலம் கிடையாது என்று அவர் சொன்னார்.
சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் சமூக மண்டபம் கட்டுவது தொடர்பான பரிந்துரையை கடந்த 2018ஆம் ஆண்டில் மந்திரி புசாரின் கவனத்திற்கு தாம் கொண்டுச் சென்றதாகவும் எனினும், இப்பரிந்துரை தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பகுதியில் சமூக மண்டபம் நிர்மாணிப்பது மிக அவசியம் என நாங்கள் கருதுகிறோம்.ஆகவே, நிலத்தை பெறுவதற்கான வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என்றார் அவர்.
அந்த கிராமத்தில் தற்போது இருக்கும் பொது மண்டபம் தனியார் நிலத்தில் முந்தைய அரசாங்கத்தினால் கட்டப்பட்டதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த மண்டபத்தை கம்போங் அசகான் சமூக நிர்வாக மன்றத்தினர் பயன்படுத்திக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் அனுமதி தர மறுப்பதாக அவர் சொன்னார்.
முந்தைய அரசாங்கத்தின் செயல் தற்போதைய அரசாங்கத்திற்கு இழப்பையும் கிராம சமூக மன்றத்திற்கு பிரச்னையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.