ஷா ஆலம், ஜன 13- தொழில்முனைவோர் மற்றும் சிறுவியாபாரிகள் மத்தியில் இலக்கவியல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சிலாங்கூர் அரசு இவ்வாண்டில் எட்டு முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளது.
அண்மையில் இத்தொழில்துறை சார்ந்த தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வின் போது இதன் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
தற்போதைய சூழலில் குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடு பொருளாதார சவாலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் தொழில்முனைவோரின் வருமானத்தை பெருக்குவதில் இலக்கவியலின் பங்களிப்பு முக்கியமானதாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டு முதல் நாட்டை உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று, சிலாங்கூரில் வர்த்தக மற்றும் தொழிலியல் வியூகத்தை வகுப்பதில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீட்டிலிருந்தவாறு சிறு அளவில் வியாபாரம் செய்வது முதல் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் ஈடுபடுவது வரை இலக்கவியலின் பங்களிப்பு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இலக்கவியலின் பங்களிப்புக்கு வகுக்கப்பட்ட அந்த எட்டு அம்சங்கள் வருமாறு-
- லைசென்ஸ்- புதிதாக உருவாக்க வேண்டிய லைசென்ஸ் முறை குறித்து ஆராய்வது அல்லது புதிய கொள்கையை வகுப்பது.
- கடனுதவி- கடனுதவியை ரொக்கமாக அல்லாமல் வியாபார உபகரணங்களாக வழங்குவது.
- இ-டொம்பேட்- அடுத்தாண்டில் ரொக்கமில்லா வர்த்தக முறையை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கேற்ப அனைத்து வியாபாரிகளும் இ-டொம்பேட் முறையை பயன்படுத்துவதை உறுதி செய்வது.
- சந்தைப்படுத்துதல்- செல்டேக் எனப்படும் இ-பெக்காலான் டிஜிட்டல் சிலாங்கூர் மற்றும் கோஹிஜ்ரா எனப்படும் கோப்ராசி வர்க ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட் ஆகிய ஆகிய மின்னியல் தளங்கள் வாயிலாக வர்த்தகர்கள் தங்கள் பொருள்களை சந்தைப் படுத்துவதை ஊக்குவிப்பது
- விளம்பரம்- சந்தைப்படுத்துதல், பரப்புரை செய்தல் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஆகிய பணிகளை எளிதாக்க ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவது
6.சமூக ஊடகங்கள்- சமூக ஊடகங்கள் வழி பொருள்களை சந்தைப்படுத்துவது அல்லது தொழில்முனைவோர் திட்டங்களை விளம்பரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை அதிகப்படுத்துவது
- தனிநபர் ஆதிக்கம்- தயாரிப்பு பொருள்கள் அல்லது தொழில்முனைவோர் திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் ஆதிக்கம் உள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவது.
- சிலாங்கூர் இலக்கவியல் தொழில்முனைவோர் பயணம்- தங்களுக்கு பொருத்தமான துறைகளில் பொதுமக்கள் ஈடுபடுவது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு ஏதுவாக ஊராட்சி மன்றங்களுடன் இணைந்து செயல்படுதல்.