கோலாலம்பூர், ஜன 18– முறையான முன்னேற்பாடுகள் இன்றி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் அவசரகால நிலையை அரசாங்கம் அறிவித்த காரணத்தால் நாட்டில் குழப்பமும் நிச்சயமற்றப் போக்கும் நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குற்றஞ்சாட்டினார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் நாட்டை முரண்பட்ட சூழலில் வைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
பொருளற்ற மற்றும் பயனற்ற ஒரு வருடாந்திர நிகழ்வாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகி விட்டது. இந்த ஆணை நிபந்தனைக்குரியது போல் தோற்றமளித்தாலும் அதுவே நிரந்தரமாகிவிடும் போல் தோன்றுகிறது மீட்சி என்பத்தெல்லாம் வெறும் வெற்றுக் கோஷமாகத்தான் உள்ளது என்றார் அவர்.
பொதுமக்களுக்க உதவி செய்து அதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை பெறுவதன் வழி நாட்டை பிரச்னையிலிருந்து மீட்பதற்கான வலுவைப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
ஆனால், அரசாங்கம் மக்களை சிரமத்தில் ஆழ்த்தும் அதேவேளையில் அவர்களை முட்டாளாகவும் சிறு பிள்ளைகளாகவும் எண்ணுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மக்கள் மீது அரசாங்கம் நம்பிக்கை கொள்ளாத பட்சத்தில் தங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என அரசாங்கம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? நேரத்திற்கு நேரம் மாறிக் கொண்டிருக்கும் எஸ்.ஓ.பி. விதிமுறைகளை பின்பற்றுவதிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்றும் அவர் கூறினார்.
எந்தவொரு வலுவான காரணமும் இன்றி இக்கட்டான சூழலுலும் அவசர கதியிலும் மொகிடின் அவசரகாலத்தை பிரகனடப்படுத்தியுள்ளார் என்றும் அவர் சொன்னார்.
மொகிடினின் இந்த நடவடிக்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான இடைவெளியை மேலும் அதிகரித்து விட்டது. மொகிடின் தன்மீது நம்பிகை வைக்கச் சொல்கிறார். அதேசமயம் அவரின் சர்வாதிகாரப் போக்கும் அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
பிரதமரின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆதரவை மீட்டு வருகின்றனர். இதற்கு மேலும் இந்த அரசாங்கத்தை நம்ப முடியுமா? எனவும் அன்வார் கேள்வியெப்பினார்.
‘