ஷா ஆலம், ஜன 23- சிலாங்கூர் மாநில அரசின் குழந்தை பராமரிப்பு மையத் திட்டம் முன்களப் பணியாளர்களின் சுமையை பெரிதும் குறைக்க உதவும் என்று பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் நம்பிகைத் தெரிவித்தார்.
இந்த மையத்தின் உருவாக்கத்தின் வழி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசின் கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குழந்தை பராமரிப்பு மையத் திட்டம் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சரியான தருணத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
மக்களின் உயிரைக் காக்கும் பொறுப்பை மட்டும் முன்களப் பணியாளர்கள் தங்கள் தோளில் சுமக்கவில்லை. மாறாக, தங்கள் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பிள்ளகைளை பராமரிக்க வேண்டிய பொறுப்பையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். தற்காலிக குழந்தை பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும் பட்சத்தில் அவர்களின் சுமையும் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த அச்சமும் ஓரளவு குறையும் என்று அவர் மேலும் சொன்னார்.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்களப்பணியளார்களுக்கு உதவும் வகையில் வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி முதல் இரு மாதங்களுக்கு இலவச குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைக்கும் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
பொது மருத்துவமனைகளில் அமைக்கப்படும் இந்த பராமரிப்பு மையங்கள் வாயிலாக 400 குடும்பங்கள் வரை பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.