ஷா ஆலம், ஜன 23- சுமார் 3,000 ‘ரைட்‘ எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்ட பங்கேற்பாளர்களுக்கு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு உள்பட பல்வேறு நலத் திட்டங்கள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள்கள் மூலம் உணவு மற்றும் பொருள் பட்டுவாடா செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு சொக்சோ நிறுவனத்தின் சுய தொழில் திட்டத்தின் வாயிலாக கூடுதலாக ஒரு வருடத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொக்சோ இயக்குநர் முஸ்தாபா டிராமான் கூறினார்.
சொக்சோ வழங்கும் கூடுதல் அனுகூலங்களில் விபத்துக்களில் ஏற்படும் தற்காலிக முடத்தன்மை, நிரந்தர முடத்தன்மை, பராமரிப்பில் உள்ளவர்களுக்கான பாதுகாப்பு, பிரேத நல்லடக்கம் ஆகியவையும் அடங்கும் என்றார் அவர்.
தற்காலிக பொருளாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள இத்தகையோருக்கான சந்தா தொகையில் 70 விழுக்காட்டை மத்திய அரசும் 30 விழுக்காட்டை சிலாங்கூர் மாநில அரசும் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
ரைட் பங்கேற்பாளர்களுக்கு பி2 லைசென்ஸ் பெறுவதற்கு 350 வெள்ளியும் மின்னியல் அழைப்பு தொடர்பான பயிற்சிக்கு 150 வெள்ளியும் சொக்சோ சந்தாவாக ஆண்டுக்கு 70 வெள்ளியும் வழங்கப்படுகிறது.
இந்த ரைட் திட்டத்தில் செல்டெக், புங்குசிட், ஜிப்தோ எக்ஸ்பிரஸ், வாரோங் ரைடர், புஃட்பண்டா ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் 17 முதல் 30 வயதுகுட்பட்டவர்களாகவும் 2,000 வெள்ளிக்கும் குறைவாக மாத வருமானம் பெறுபவர்களாகவும் கடந்தாண்டு ஜனவரி முதல் வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.