ஷா ஆலம், ஜன 25- கிராமப் புறங்களைச் சேர்ந்த சுமார் 40,000 பேருக்கு இணைய சிம் கார்டுகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும். தரமான இணைய அலைவரிசையை கிராமப்புற மக்கள் பெறுவதை உறுதி செய்யவும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கல்வி மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வகை செய்யும் இத்திட்டம், ராக்கான் டிஜிட்டல் இயக்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நோக்கம் நிறைவேற்றம் காண்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநில மக்களுக்கான இணைய தரவு ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட அலுவலகங்களுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம் என்றார் அவர். வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூர் மாநிலத்தின் உட்புறப்பகுதிகள் எதிர் நோக்கும் இணைய அடைவு நிலைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில "மாநில விவேக" விநியோகப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் முதல் கட்டமாக கோல சிலாங்கூரில் தொடங்கப்பட்டு விட்டதாகவும் இதர புறநகர்ப் பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தும் என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் உள்ள 60 முதல் 70 விழுக்காட்டு பகுதிகள் அதிக ஆற்றல் கொண்ட இணைய வசதியை கொண்டுள்ளன. சில பகுதிகள் மட்டுமே 2ஜி அலைக்கற்றையை இன்னும் பயன்படுத்துகின்றன. இந்த அலைக்கற்றை மூலம் தகவல்களை மட்டும் அனுப்ப முடியும். ஆனால், காணொளிகளை அனுப்ப இயலாது என்றார் அவர்.