கோல சிலாங்கூர், பிப் 14- கால்நடைகளை கட்டுப்பாடின்றி சாலைகள் மற்றும் வீடமைப்புப் பகுதிகளில் மேய விட்டதற்காக இரு கால்நடை வளர்ப்போருக்கு கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் அபராதம் விதித்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இச்செயலுக்காக இங்குள்ள ராஜா அப்துல்லாவை சேர்ந்த அவ்விரு கால்நடை உரிமையாளர்களுக்கும் இம்மாதம் 9ஆம் தேதி அபராதம் விதிக்கப்பட்டது.
பெஸ்தாரி ஜெயா, ஈஜோக் மற்றும் ஜெராம் வட்டாரத்தில் தாங்கள் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது எட்டு ஆடுகளும் இரு மாடுகளும் பிடிபட்டதாக மாவட்ட மன்றம் தனது முகநூல் வாயிலாக தெரிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயிரம் வெள்ளி வரை அபராதம் அல்லது 12 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் 1971ஆம் ஆண்டு மாடு-எருமை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 5(1)வது பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக அது கூறியது.
பிடிபடும் கால்நடைகள் சிறப்புக் கூண்டுகளில் தடுத்து வைக்கப்படும். அங்கு வைக்கப்படும் கால்நடைகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். அதன் பிறகே அவற்றை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கண்ட சட்டத்தின்படி மேற்கொள்ள இயலும் என்று அந்த முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.