ஷா ஆலம், பிப் 14- கிள்ளான் ஆற்றின் கீழ்நிலைப்பகுதியில் புதிதாக நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஆயர் சிலாங்கூர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எதிர்காலத்தில் பயனீட்டாளர்களுக்கு கூடுதல் நீர் கிடைப்பதற்குரிய வாய்ப்பினை இந்த சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்தும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
ஆற்றின் கீழ்நிலைப்பகுதியிலிருந்து நீரை உறிஞ்சி அதனை நீர் சேகரிப்பு குளங்களில் உயிரியல் முறையில் சுத்திகரித்து பின்னர் நீர் சுத்திகரிப்பு மையங்களில் வழக்கமான முறையில் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்வது உலகம் முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பாளர்களின் புதிய பாணியாக விளங்குகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
எதிர்கால நீர் பயனீட்டு வளமாக பயன்படுத்தப்படவிருக்கும் கிள்ளான் ஆற்று நீரின் தரம் குறித்து பலர் சமூக ஊடகங்கள் கேள்வியெழுப்பிருந்தது குறித்து அந்நிறுவனம் இவ்வாறு கருத்துரைத்தது.
இதனிடையே, இவ்விவகாரம் குறித்த சிலாங்கூர் கினியின் கேள்விக்கு பதிலளித்த ஆயர் சிலாங்கூர் நிறுவனப் பேச்சாளர் ஒருவர், இந்த நீர் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பான மேல் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனக்கூறினார்.